5,000 ஆண்டுகளாக மறைந்திருந்த பிரம்மாண்ட கோட்டை.!!

ருமேனியாவின் நீம்ட் (Neamț) மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 5,000 ஆண்டுகளாக மனிதக் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து இருந்த பிரம்மாண்டமான கோட்டையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கற்காலத்திலிருந்து (Neolithic) வெண்கலக் காலத்திற்கு (Bronze Age) உலகம் மாறிக்கொண்டிருந்த காலகட்டத்தை சேர்ந்த இந்த அமைப்பு, நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அடர்ந்த செடி கொடிகளால் முழுமையாக மூடப்பட்டிருந்த இந்தக் கோட்டை, LiDAR (Light Detection and Ranging) எனப்படும் லேசர் தொழில்நுட்பம் இல்லையென்றால் ஆராய்ச்சியாளர்களின் கண்ணில் பட்டிருக்கவே வாய்ப்பில்லை. ட்ரோன்களில் பொருத்தப்பட்ட லேசர் கருவிகள் மூலம் காட்டின் தரைப்பகுதியை ஸ்கேன் செய்து இந்த வரைபடம் உருவாக்கப்பட்டது

பாரம்பரிய முறையில் மண்ணைத் தோண்டி அல்லது காடுகளை அழித்து ஆய்வு செய்வதற்குப் பதிலாக, LiDAR கருவி லேசர் கதிர்கள் நிலத்தை நோக்கிப் பாய்ச்சுகிறது. அந்தக் கதிர்கள் தரையில் பட்டுத் திரும்ப எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் கணக்கிட்டு, நிலப்பரப்பின் துல்லியமான வடிவத்தை இது படம்பிடிக்கிறது. நவீன LiDAR தொழில்நுட்பத்தால் 5,000 ஆண்டுகள் பழமையான இக்கோட்டையின் துல்லியமான பிம்பத்தைப் பெற முடிந்தது. அடர்ந்த காடுகளால் எங்களால் நேரடியாகப் பார்க்க முடியாத பல நுணுக்கமான தகவல்களை இந்த ஸ்கேன் வழங்கியுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கோட்டை வெறும் தங்குமிடம் மட்டுமல்ல, அது ஒரு மிகச்சிறந்த பாதுகாப்பு அரணாகச் செயல்பட்டுள்ளது. எதிரிகள் வருவதை வெகு தொலைவில் இருந்தே கண்டறியும் வகையில் இது உயரமான மேட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டையை சுற்றி நூற்றுக்கணக்கான மீட்டர் நீளத்திற்கு அகழிகளும், மண் மேடுகளும் (Earthen mounds) உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய அமைப்பைக் கட்ட அந்தக்கால மனிதர்கள் பெரும் உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டிருக்க வேண்டும். இது, அந்தச் சமூகம் மிக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு சமூகமாக இருந்ததைக் காட்டுகிறது. இந்தக் கண்டுபிடிப்புக்கு பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதையும் உள்ளது. இந்த ஆய்வில் Geocad Services, Geo Edu Lab மற்றும் நில இயற்பியலுக்கான தேசிய நிறுவனம் ஆகியவை இணைந்து செயல்பட்டன.