கோவை எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு… பிளேடால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி..

கோவை ரயில் நிலையம் ரோட்டில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. புறநகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் இந்த அலுவலகத்திற்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயனை சந்தித்து புகார் மனு கொடுத்து வருகிறார்கள் .இந்த அலுவலக நுழைவு வாயிலில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அங்கு வருபவர்களை விசாரித்து அனுப்புவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை அந்த அலுவலக வளாகத்தில் ஒரு நபர் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தார் .இதனால் சந்தேகம் அடைந்த அலுவலகத்தில் நின்றிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர் .அதில் அவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சுடலை (வயது 34) என்பதும் கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் தங்கி வருவதும் தெரிய வந்தது .தொடர்ந்து அந்த நபரிடம் ஏன் எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்தீர்கள்? என விசாரித்தனர். அப்போது அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து தனது கழுதை அறுத்துக் கொண்டார். இதனால் கழுத்து பகுதியில் இருந்து ரத்தம் கொட்டியது. அதை பார்த்த அதிர்ச்சி அடைந்த போலீசார் சுடலையை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் சுடலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவை வந்ததும், அரசு மருத்துவமனை அருகே இரவு நேரத்தில் படுத்துவிட்டு கிடைத்த வேலையை செய்து கொண்டு வருவதும் ,லேசாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது .தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது..