சென்னை: திரைப்படத் துறையில் உயரிய விருதான ஆஸ்கர் விருதில், ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக இணைய நடிகர் கமல்ஹாசன் உள்பட 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திரைப்படத் துறையில் உலகம் முழுக்க சிறந்த படைப்புகளை உருவாக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகைகளுக்கு ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்சஸ் என அழைக்கப்படும் ஆஸ்கர் அகாடமி தான் இந்த விருதினை வழங்கி வருகிறது.
உலகம் முழுக்க திரைப்பட துறையில் சிறந்த படைப்பாளர்கள், நடிகர் நடிகைகளை ஆஸ்கர் அகாடமியில் உள்ள விருதுக்காக தேர்வு செய்யப்படும் குழுவானது தேர்வு செய்கிறார்கள். இதேபோன்று இந்த தேர்வுக் குழுவுக்கும் ஆண்டுதோறும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அப்படித்தான் இந்த ஆண்டிலும் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யும் புதிய உறுப்பினர்களாக இணைவதற்கு 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
இதில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஆயுஷ்மான் குரானா, இயக்குனர் கரண் மாலி, ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, ஒளிப்பதிவாளர் ரன்பீர் தாஸ் உள்பட பலருக்கு உறுப்பினர்களாக சேர ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்து இருக்கிறது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் – கலைஞானி கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்! மொழி – தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது! என்று ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.