சென்னை:தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்கும் வகையில், தமிழக கடலோர மாவட்டங்களில் சாகர் கவாச் என்ற பெயரில் தொட்கிய 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை, இன்று மாலையில் நிறைவடைகிறது.தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் காவல்துறையின் சார்பில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இதில், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, கடலோர காவல் படை, குற்றப் பிரிவு போலீசார் என அனைத்து பாதுகாப்புப் பிரிவினரும் பங்கேற்றனர்.பாதுகாப்பு ஒத்திகையையொட்டி, தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள், மீன் சந்தைகள், கடலோரம் உள்ள கோயில்கள், அரசு அலுவலங்கள், பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. மேலும், அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தீவிரவாதி போன்று மாறுவேடமிட்டு கடல் வழியாக ஊடுருவிய காவலர்களை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர். இந்த பாதுகாப்பு ஒத்திகையில் மொத்தம் 8 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதையொட்டி, சென்னையில் தலைமைச் செயலகம், துறைமுகம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், டிஜிபி அலுவலகம், சென்னை காவல் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தமிழகத்தில் கடலோர மாவட்ட்ங்களில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 36 மணி நேர ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை
