கோவை ஜூன் 25 கோவை ரயில் நிலையத்திலிருந்து தினமும் ஏராளமான ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன. வெளி மாநில ரயில்களும் கோவை வழியாக வருகின்றன .ரயிலில் உணவு தயாரித்து பயணிகளுக்கு விற்பனை செய்ய பிருந்தாவன் என்கிற உணவு தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் பெற்று செயல்பட்டு வருகிறது. ரயில் பயணிகளுக்கு உணவு விற்ற பணத்தை பெறுவதற்காக இந்த நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் பெரிய கடை வீதி உள்ளது. உணவு விற்பனை நிறுவன ஊழியர்கள் பயணிகளுக்கு உணவு விற்ற பணத்தை இங்கு வந்து தினமும் செலுத்துவார்கள். இந்த நிறுவனத்தின் மேலாளராக தென்காசி மாவட்டம், கடையநல்லூரை சேர்ந்த நாகராஜ் ( வயது 48) என்பவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சேர்ந்தார். இவருக்கு மாத சம்பளம் ரூ 25 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. அவர் அந்த நிறுவனத்தில் வங்கி கணக்கு விவரங்களை நிர்வகித்து வந்தார். இந்த நிலையில் அதே நிறுவனத்தின் டெல்லி அதிகாரிகள் கோவை வந்து அந்த நிறுவனத்தில் வரவு – செலவு உள்ளிட்ட கணக்குகளை தணிக்கை செய்தனர். அப்போது கடந்த மே மாதம் உணவுவிநியோகம் செய்த வகையில் ரூ 63 லட்சம் கணக்கில் வரவேண்டும். ஆனால் உணவு நிறுவன வங்கி கணக்கில் ரூ.63 லட்சத்திற்கு பதிலாக ரூ 11 லட்சம் மட்டுமே செலுத்தியதும், ரூ. 52 லட்சத்தை நாகராஜ் கையாடல் செய்திருப்பதும் தெரியவந்தது .இது குறித்து அந்த நிறுவனத்தின் டெல்லி அதிகாரிகள் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் .அதன் பேரில் நாகராஜ் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளில் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.
ரயிலில் உணவு சப்ளை செய்யும் நிறுவனத்தில் ரூ.52 லட்சம் மோசடி. மேலாளர் மீது வழக்கு
