சென்னை: ஜூன் 19, 2025 நிலவரப்படி, மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழ்நிலை நிலவினாலும் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.தற்போதைய விலை உச்சமாக இருக்கலாம் என்றும், தங்கத்தின் விலை எதிர்காலத்தில் ஒரு அவுன்ஸுக்கு $3,400-லிருந்து $2,400 வரை குறைய வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். அதாவது 1 அவுன்ஸுக்கு.. கிட்டத்தட்ட 31 கிராம் தங்கத்திற்கு 86 ஆயிரம் ரூபாய் தங்கம் விலை குறையும். வரும் ஒன்றிரண்டு மாதங்களில் தங்கம் 8-10% வரை குறைய வாய்ப்புள்ளது என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.இந்த ஆண்டு ஏறத்தாழ 30% வரை தங்கத்தின் விலை உயர்ந்த பிறகு, மத்திய கிழக்கில் பதட்டமான சூழல் அதிகரித்த போதிலும், தங்கத்தின் விலையில் பெரிய மாறுதல்கள் எதுவும் இல்லை. தற்போது தங்கம் உச்சத்தை எட்டி விட்டது, இதனால் வரும் ஒன்றிரண்டு மாதங்களில் 10% வரையும், அடுத்த ஒரு வருடத்தில் 30% வரையும் விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல், மத்திய வங்கியின் கொள்முதல், ETF தேவை மற்றும் டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற காரணிகள் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்தது. இனி அப்படி உயர வாய்ப்பு இல்லை.சிட்டி வங்கி தனது அறிக்கையில், அடுத்த ஒரு வருடத்திற்கான தங்கத்தின் விலை நினைத்தபடி உயராது. இப்போது போதுமான அளவு உயர்ந்து விட்டதால் அடுத்து கடுமையான சரிவை சந்திக்கும. அடுத்த மூன்று மாதங்களுக்கான தங்கத்தின் விலை $3,500-லிருந்து $3,300 ஆகவும், ஆறு முதல் பன்னிரெண்டு மாதங்களுக்கு $3,000-லிருந்து $2,800 ஆகவும் இருக்கும் என்று கணித்துள்ளது.கேடியா அட்வைசரி நிறுவனத்தின் அஜய் கேடியா வெளியிட்ட கணிப்பில் “மத்திய கிழக்கு மற்றும் கருங்கடல் பகுதிகளில் ஒரே நேரத்தில் போர் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையை கடந்த 10-20 ஆண்டுகளில் நாம் பார்த்ததில்லை. இஸ்ரேல்-ஈரான் போர் தொடங்கிய ஏழு நாட்களில், முதல் நாள் தங்கம் உயர்ந்தது. ஆனால், அதன் பிறகு பதட்டங்கள் அதிகரித்தாலும், தங்கம் அதற்கு எதிர்வினையாற்றவில்லை. இந்த காரணிகள் முதிர்ச்சியடைந்துவிட்டன என்பதை இது காட்டுகிறது” என்று கூறினார்.மேலும் அவர் கூறுகையில், “இதுபோன்ற சூழ்நிலையில், தங்கம் ஒரு அடி பின்வாங்கி பின்னர் மீண்டு வரும். ஆகவே, சர்வதேச சந்தையில் தங்கம் கண்டிப்பாக வரும் நாட்களில் சரியும்”.சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது $3,371.15 ஆக உள்ளது.அஜய் கேடியா மேலும் கூறுகையில், “எனவே, வரும் ஒன்றிரண்டு மாதங்களில் தங்கத்தின் விலை 8-10% வரை குறைய வாய்ப்புள்ளது. அடுத்த ஒரு வருடத்தில் தங்கம் $2,700-2,800 வரை குறையலாம். உலகளாவிய பதட்டங்கள் கணிசமாகக் குறைந்தால், $2,400 வரை கூட குறைய வாய்ப்புள்ளது,” என்று கேடியா தெரிவித்தார்.தற்போதைய தங்கத்தின் விலையுடன் ஒப்பிடும்போது $2,400 என்பது 30%க்கும் அதிகமான சரிவாகும்.தங்கத்தின் விலை உயர்வு சில்லறை சந்தையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து காஷி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் ஸ்ரேயான்ஷ் கபூர் கூறுகையில், “தங்கத்தின் விலை உயர்வு சில்லறை சந்தைக்கு நல்ல அறிகுறி அல்ல. இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் லாபம் ஈட்ட தங்கள் பழைய நகைகளை விற்கத் தொடங்குகிறார்கள். அதிக விலை திருமண பட்ஜெட்களையும் பாதிக்கிறது. நான் இவ்வளவு அதிகமான மக்களை தங்கம் விற்க வருவதை பார்த்ததே இல்லை. எனது 25 வருட அனுபவத்தில், இவ்வளவு அதிகமான மக்கள் தங்கள் பழைய நகைகளை பணமாக்க வெளியே எடுப்பதை நான் பார்த்ததில்லை. முன்பு 5-7% மக்கள் தங்கள் பழைய நகைகளை விற்க வருவார்கள். இப்போது அது 25% ஆக உள்ளது. இதில் மாற்றுதல் மற்றும் பணமாக்குதல் இரண்டும் அடங்கும்” என்றார் கபூர்.
தங்கம் விலை சரமாரியாக சரியுமாம்.. வல்லுநர் விடுத்த வார்னிங்
