பெய்ஜிங்: இப்போது சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் இருக்கிறது. வர்த்தகத்திற்கு டாலரின் பங்கு முக்கியமானதாக இருப்பதே இதற்குக் காரணம்.இதற்கிடையே டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் சீன நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டு வருவது போலத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் சீன மத்திய வங்கி ஆளுநரின் பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.உலக வர்த்தகத்தில் டாலருக்கு இப்போது முக்கியமான பங்கு இருக்கிறது. உலகில் இப்போது எந்த நாடு எந்தவொரு பொருளைக் கொடுத்தாலும் வாங்கினாலும் அதற்கு டாலரே கரன்சியாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் டாலரின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது. இது அமெரிக்காவுக்கு அதிகபட்ச பவரை கொடுக்கிறது.இதற்கிடையே அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது போலச் சீன மத்திய வங்கியின் ஆளுநர் பான் கோங்ஷெங் கூறியிருக்கிறார். அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் சீனா இதர நாடுகளுடன் சேர்ந்து புதிய சர்வதேச நாணய அமைப்பை உருவாக்க ரெடியாக இருப்பதாகவும் பான் கோங்ஷெங் கூறியிருக்கிறார்.ஷாங்காயில் நடைபெற்ற சீனாவின் முக்கிய பொருளாதார மன்றத்தில் பேசிய பான் கோங்ஷெங், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகே அமெரிக்க டாலர் தனது ஆதிக்கத்தை அதிகரித்தது என்றும் அதன் பிறகு இப்போது வரை அதே நிலை நீடிப்பதாகத் தெரிவித்தார். இதுபோல ஒரே நாணயத்தை மட்டுமே அதிகமாக நம்பியிருப்பது ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “இப்போது டாலர் ஆதிக்கம் செலுத்தினாலும் கூட வரும் காலத்தில் இதே நிலை நீடிக்கும் எனச் சொல்ல முடியாது. எதிர்காலத்தில் ஒரே நேரத்தில் பல நாணய அமைப்புகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் வகையில் இருக்கும். அப்போது சீன கரன்சியின் பங்கு சற்று அதிகமாகவே இருக்கும்.கடந்த 20 ஆண்டுகளில் கரன்சி சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தையும் நாம் கவனிக்க வேண்டும். முதலில் சர்வதேச நாணய அமைப்பில் யூரோ அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல 2008 உலக நிதி நெருக்கடிக்குப் பிறகு சீன கரன்சியின் வளர்ச்சி முக்கியமானதாக இருந்தது. இப்போது உலகின் இரண்டாவது முக்கியமான நாணயமாகச் சீன கரன்சி இருக்கிறது. மேலும், மூன்றாவது பெரிய பேமெண்ட் கரன்சியாகவும் இருக்கிறது” என்றார்.சீன மத்திய வங்கி ஆளுநரின் இந்த கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. டிரம்பால் அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அவர் டாலருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல சர்வதேச கரன்சிகள் தேவை என்பது போலப் பேசியிருக்கிறார். பான் மேலும் கூறுகையில், “புவிசார் அரசியல் மோதல்கள் போர்கள் ஏற்படும்போது, சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தும் நாணயம் (டாலரை மறைமுகமாக சொல்கிறார்) எளிதில் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது” என்றார்.அதேநேரம் டாலருக்கு எதிராகக் குரல்கள் எழுவது இது முதல்முறை இல்லை. கடந்த காலங்களிலும் இதுபோல குரல்கள் எழுந்துள்ளன. இருப்பினும், டாலருக்கு மாற்றை உருவாக்க முடியாமலேயே போய்விட்டது. ஆனால், இப்போது டிரம்ப் காலத்தில் நிலவும் சூழலே வேறு விதமாக இருக்கிறது. இதனால் டாலருக்கு மாற்றாக கரன்சி உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் கிட்டதட்ட இதே போன்ற கருத்துகளைக் கூறியிருந்தார். டாலரின் ஆதிக்கம் இனியும் இதேபோல இருக்காது எனக் கூறிய அவர், இதனால் சர்வதேச அளவில் யூரோவுக்கு முக்கியத்துவம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்தச் சூழலில் தான் சீன மத்திய வங்கி ஆளுநரும் கிட்டதட்ட அதே கருத்தைக் கூறியிருக்கிறார்.