வீடுகளை காலி செய்ய சொல்லும் வருவாய்த்துறை :  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்..!

ராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டினம் அருகே உள்ள திலகவதி அம்மன் தெருப் பகுதியில், சர்வே எண் 94-ல் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக 21 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.

இந்த குடியிருப்புப் பகுதி மக்கள், 2017 ஆம் ஆண்டு வரை கோயில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தி வந்துள்ளனர்.
ஆனால், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு கோயில் நிர்வாகம் திடீரென வாடகை பெறுவதை நிறுத்திவிட்டு, குடியிருப்போர் அனைவரும் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், கோயில் நிர்வாகி துளசிராமனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால், அவர் காலி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என காட்டமாகப் பதிலளித்ததாகவும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி, சர்வே எண் 96 மட்டுமே காலி செய்யப்பட வேண்டும் என்று வந்த நிலையில், ராமநாதபுரம் வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் துணையுடன், தனிநபர் சர்வே எண் 94-ஐயும் காலி செய்ய வேண்டும் என வட்டாட்சியர் தலைமையில் அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இன்று மாவட்ட ஆட்சியரிடம் திரண்டு வந்து மனு அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை செய்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நியாயம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து கோரிக்கை வைத்துள்ளனர்.