கோவை, மே 24கோவை பொள்ளாச்சி அடுத்த மகாலிங்கபுரம் பகுதியில் யுத்திர சாரிட்டபிள் டிரஸ்ட் பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு சுமார் 22 பேர் மனவளம் குன்றிய மற்றும் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்இந்த காப்பகத்தில் கோவை சோமனூர் பக்கம் உள்ளமாதப்பூரை பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் இவரது மகன் வருண் (22) சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு அங்கு அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரும் உள்ளே சென்று காப்பகத்தில் உள்ளவர்களை சந்திக்கக் கூடாது என காப்பக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே கடந்த 15-ம் தேதி காப்பகத்தில் இருந்த ஆட்டிசம் பாதிக்கப்பட்ட ரவிக்குமாரின் மகன் வருண் காணாமல் போனதாக தகவல் வந்துள்ளது.இது குறித்து விசாரிக்க சென்ற ரவிக்குமார் மற்றும் அவரது உறவினர்களிடம் பொள்ளாச்சி ஆழியார் அணைக்கு காப்பகத்தில் உள்ள சிறுவர்களை சுற்றுலா அழைத்துச் சென்றதாகவும், அங்கு வைத்து வருணை காணவில்லை என்றும் காப்பக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சில காப்பக நிர்வாகிகள் ஆட்டிசம் நோய் பாதிக்கப்பட்ட வருண் காணாமல் போனதாக கூறப்பட்ட 15ம் தேதிக்கு முன்பே அவர் காணாமல் போனதாகவும், காப்பகத்தில் அவரை காப்பக நிர்வாகிகள் அடித்து சித்திரவதை செய்ததாகவும், ரவிக்குமாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார் ஆழியார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் தொடர்ந்து நேற்று எஸ்.பி. அலுவலகத்தில்போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயனிடம் புகார் மனுவையும் கொடுத்தார்.இதை தொடர்ந்து எஸ்.பி. கார்த்திகேயன் 6 தனிப்படை அமைத்து மாயமான வாலிபரை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட வருண் மாயமான சில நாட்கள் கழித்து அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இதனால் அவரை உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. ரவிக்குமார் ஆழியார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததும் போலீசார் காப்பகத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தற்போது தனிப்படை அமைக்கப்பட்ட தகவலை அறிந்து காப்பகத்தின் உரிமையாளர்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மாயமாகிவிட்டனர். அங்கிருந்த குழந்தைகள் 22 பேரை காப்பகத்தின் உரிமையாளர் ஒருவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைகள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். மாயமானவர்கள் எங்கு உள்ளார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். காப்பகத்தில் உள்ள அனைவரும் மாயமாகி இருப்பதால் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட வாலிபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி மனநல காப்பகத்தில் மாயமான வாலிபர் கொலை ? பிணம் தோண்டி எடுப்பு.
