ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில், பா.ஜ.க ஆளாத மாநில அரசுகளின் மீதும், பா.ஜ.க சாராத அரசியல் தலைவர்கள் மீதும் அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய விசாரணை அமைப்புகளை ஏவிவிட்டு, அச்சுறுத்துவது வழக்கமான நடவடிக்கையாக அமைந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி, மக்களிடம் பெற்றிருக்கிற பெரும் மதிப்பை கெடுக்கும் வகையில், டாஸ்மாக் மீது புகார் அளிக்கப்பட்டு, அதன் வழி தமிழ்நாடு அரசின் நன்மதிப்பை போக்க, பா.ஜ.க முன்னெடுத்த திட்டத்திற்கு தடையிட்டு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளது என எழுந்த புகாரை ஏற்று அமலாக்கத்துறை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அளித்த ஒப்புதலை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இவ்வழக்கு, நேற்று (மே 22) விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “2017ஆம் ஆண்டு முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது 41 FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது தனிப்பட்டவர்கள் செய்த முறைகேடுகளை விசாரிக்க, நிர்வாக தலைமை அலுவலகத்தில் சோதனை செய்துள்ளனர். இது எவ்வகையில் சரியாக இருக்கும்?” என்றார்.
அதனை ஏற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “அமலாக்கத்துறை எல்லை மீறி நடந்து வருகிறது. தனிப்பட்டவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கு, அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனி நபர்கள் சிலர் விதியை மீறியதாக சொல்லி, ஒரு நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்வது நியாயமா? தனிநபருக்காக, ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தை எப்படி நீங்கள் விசாரிப்பீர்கள்?” என கண்டித்துள்ளார்.
மேலும், “டாஸ்மாக் நிர்வாகத்திற்கு எதிராக தகுந்த ஆதாரங்கள் இல்லாத நிலையிலும், டாஸ்மாக் அலுவலகத்தை விசாரிக்க அமலாக்கத்துறை முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்து அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.