உச்சநீதிமன்றத்திற்கே சவால் விடும் ஜனாதிபதி மற்றும் மத்திய அரசு – முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்.!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தமிழக கவர்னர் வழக்கு மற்றும் பிற முன்னுதாரணங்களில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் தீர்த்து வைத்த அரசியலமைப்பு நிலைப்பாட்டைத் தகர்க்க முயற்சிக்கும் மத்திய அரசு, ஜனாதிபதியின் கடிதத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மக்களின் ஆணையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் பா.ஜ.க.வின் கட்டளைப்படி தமிழக கவர்னர் செயல்பட்டார் என்பதை இந்த முயற்சி தெளிவாக அம்பலப்படுத்துகிறது.ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, மத்திய அரசின் முகவர்களாகச் செயல்படும் கவர்னர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதன் மூலம் பலவீனப்படுத்தும் ஒரு தீவிர முயற்சி இது. இது சட்டத்தின் மகத்துவத்தையும் அரசியலமைப்பின் இறுதி விளக்கவுரையாளரான சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரத்தையும் நேரடியாக இக்கடிதம் சவால் செய்கிறது.

கவர்னர்கள் செயல்படுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதில் ஏன் எந்த ஆட்சேபனையும் இருக்க வேண்டும்? மசோதா ஒப்புதலில் காலவரையற்ற தாமதங்களை அனுமதிப்பதன் மூலம் பா.ஜ.க. தனது கவர்னர்களின் தடையை சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறதா? பா.ஜ.க. அல்லாத மாநில சட்டமன்றங்களை முடக்க மத்திய அரசு விரும்புகிறதா?

நமது நாடு ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. இந்தக்குறிப்பில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள், அரசியலமைப்பின் அடிப்படை அதிகாரப்பகிர்வை சிதைத்து, எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநில சட்டமன்றங்களை செயலிழக்கச் செய்யும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் தீய நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன. எனவே, இது மாநில சுயாட்சிக்கு ஒரு தெளிவான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்த மோசமான சூழ்நிலையில், அரசியலமைப்பைப் பாதுகாக்க இந்த சட்டப் போராட்டத்தில் இணையுமாறு அனைத்து பா.ஜ.க. அல்லாத மாநிலங்களையும் கட்சித் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் போரில் நாம் நமது முழு பலத்துடன் போராடுவோம். தமிழ்நாடு போராடும்-தமிழ்நாடு வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை முன்வைத்து, ஜனாதிபதி திரெளபதி முர்மு சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கவர்னர்களுக்கு, ஜனாதிபதிக்கு காலக்கெடு விதிக்க முடியுமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவர் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.