கோவையில் வெவ்வேறு சாலை விபத்துகளில் மூதாட்டி, முதியவர் பலி..

கோவை மாவட்ட பொள்ளாச்சி பக்கம் உள்ள புளியம்பட்டி எம்.ஜி.ஆர். காலனி சேர்ந்தவர் வீரன். இவரது மனைவி நாச்சியம்மாள்( வயது 62) இவர் நேற்று பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் நடந்து சென்றார். புளியம்பட்டியில் உள்ள ஒரு பேக்கரி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த நாச்சியம்மாள் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்.

இதே போல பொள்ளாச்சி |முத்து கவுண்டன் புதூரை சேர்ந்தவர் மாகாளி (வயது 70) இவர் நேற்று பொள்ளாச்சி- கோவை ரோட்டில் உள்ள நஞ்சேகவுண்டன் புதூர் ரயில்வே கேட் அருகே ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு 4சக்கர வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் மாகாளி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து அவரது மகன் ராஜன் வடக்கிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாகனத்தை தேடி வருகிறார்கள்.