சிறார் குற்றங்களுக்கு தீர்வு… இதோ வந்துவிட்டது ‘சிற்பி’ திட்டம்..!

சென்னை: சிறார் குற்றச்செயல்களுக்கு தீர்வு காணும் வகையில் ‘சிற்பி’ என்னும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னையில் பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க, மாநகர காவல் துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை தொடங்க கடந்தாண்டு சென்னைகாவல் துறை முடிவெடுத்தது.

இதன்படி, சிறார் குற்றச்செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படும் சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும் சென்னையில் சிற்பி என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய காவல் துறை நடவடிக்கை எடுத்தது. குறிப்பாக, சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை கொண்டு சிற்பி திட்டத்தை சென்னை மாநகர காவல் துறை செயல்படுத்துகிறது.

இந்தத் திட்டப்படி, 8ம் வகுப்பு முதல் உள்ள மாணவர்களை தேர்வுசெய்து, அவர்களுக்கு தனி சீருடை வழங்கப்பட உள்ளது. அதேபோல் பள்ளிகளில் தேசிய மாணவர் படை போன்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த காவல் துறை திட்டமிட்டுள்ளது.

அத்துடன், மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லுதல், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களின் திறன்களை மேம்படுத்துதல், சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாற்றும் வகையில், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து சட்ட கல்வியறிவு பெறச் செய்தல் போன்றவையும் இத்திட்டத்தில் அடங்கும்.

இதுதவிர, காவல் கட்டுப்பாட்டு அறை அவசர எண், காவலன் செயலி, முதியோர் உதவி எண், காவல் கரங்கள் உள்ளிட்ட அவசர கால எண்கள் குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்துவதுடன், அவர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் பள்ளி மாணவர்களின் தகவல்களை பெறும் வகையில், அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிற்பி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கிறார். முதல்கட்டமாக சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை கொண்டு இந்த சிற்பி திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.