மோசடியில் ஈடுபடும் போலி பத்திரிகையாளர்கள்: கோவை கலெக்டர்  எச்சரிக்கை

மோசடியில் ஈடுபடும் போலி பத்திரிகையாளர்கள்: கோவை கலெக்டர்  எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்., சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘

பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும் அவர்களிடம் கூறி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறேன் என்று பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டுள்ளனர். மேலும், அவர்களிடம் ஏமாற்றி பணத்தை பறித்து விடுவதாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் வர பெற்றுள்ளன. இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமல்லாமல் காவல்துறை மூலமாக வழக்கு பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது.

அந்த நபர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு பணியில் உள்ள அலுவலர்களிடம் அவர்களின் பணிக்கு இடையூறு அளிக்கும் வகையில் பிறரின் கோரிக்கை மனுக்களை பத்திரிகையாளர் என்ற பெயரில் சிபாரிசு செய்யும் நபர்கள் குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தகவல் தெரிவிக்கும்படி அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பத்திரிகையாளர் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 9498042423 என்ற whatsapp எண்ணிற்கு தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவல்களை அனுப்பினால் அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.