கோவையில் 81 தபால் நிலையங்களில் களைகட்டியது தேசிய கொடி விற்பனை..!!

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை, ஒவ்வொரு வீட்டிலும்
தேசியக்கொடியை ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
தபால் நிலையங்களில் மூவர்ணக்கொடி என்ற பிரசாரம் அடிப்படையில் நாட்டில் உள்ள, 1.6 லட்சம் தபால் நிலையங்களில் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில், தேசியக்கொடியை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய தேசிய கொடிகள், காதிப்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் வாயிலாகவும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய தேசிய கொடிகள், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எட்டு சிறு, குறு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மக்களுக்கு வசதியாக, கோவை டிவிஷனுக்கு உட்பட்ட, 81 தபால்
நிலையங்களில் தேசிய கொடி விற்பனை நேற்று தொடங்கியது. ஒரு கொடியின் விலை,
25 ரூபாய் ஆகும். மேலும் அஞ்சலகங்களில் செல்பி போர்டு வைக்கப்பட்டுள்ளது.
தேசியக்கொடி வாங்கும் மக்கள், செல்பி போர்டு முன் நின்று படம் எடுத்து,
இணையதளத்தில் பகிரலாம். இ-போஸ்ட் அலுவலகம் மூலமாக
https://www.indiapost.gov.in, https://www.epostoffice.gov.in/ ஆகிய
இணையதளங்களில் தேசியக்கொடிகளை வாங்கலாம்.

இதுகுறித்து கோவை மாவட்ட தபால்துறை அலுவலர்கள் கூறியதாவது:-
ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றுவதால், மக்களிடையே தேசபக்தி உணர்வை
ஏற்படுத்தப்படும். தேசத்திற்காக உழைத்தவர்களின் பங்களிப்பை
நினைவுபடுத்தும். ஒவ்வொரு தபால் அலுவலகம், தலைமை அலுவலகங்கள், துணை அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்களில் ஆகஸ்டு 15-ந் தேதி தேசிய கொடி ஏற்றப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.