பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் 50,000 கோடி சேமிப்பு – பிரதமர் மோடி பெருமிதம்..!

கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில் பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதன் மூலம் அந்நிய செலாவணியில் இருந்து சுமார் 50,000 கோடி சேமித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலம் பானிப்பட்டில், 900 கோடி ரூபாய் மதிப்பில் 2 ஆம் தலைமுறை எத்தனால் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அதில் பேசியவர், ‘இந்திய ஆயில் கார்ப்பரேஷனின் இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன். கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில் பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதன் மூலம் அந்நிய செலாவணியில் இருந்து சுமார் 50,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இந்த 50,000 தொகை விவசாயிகளுக்கு சென்றுள்ளது.

8 ஆண்டுகளில் எத்தனாலின் உற்பத்தி 40 கோடி லிட்டரில் இருந்து 400 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. இந்த எத்தனால் ஆலை விவசாயிகளுக்கு வருமானத்தை அதிகரிக்கும். பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்கும். ஹரியானா மற்றும் டெல்லியில் மாசுபாட்டை குறைக்கும்.

அதோடு உயிரி எரிபொருள் உற்பத்திக்கு உணவு அல்லாத உயிர்ப்பொருளைப் பயன்படுத்தும். இந்த திட்டம் 2 லட்ச டன் வைக்கோலை பயன்படுத்தி ஆண்டுக்கு சுமார் 3 கோடி லிட்டர் எத்தனாலை உற்பத்தி செய்யும் என தெரிவித்துள்ளார்.