கோவையில் 31-ந் தேதி பா.ஜ.க.வின் பந்த் அவசியமற்றது – மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி..!

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அமைதியான கோவை அனைவருக்கும் தேவை என்ற அடிப்படையில் கோவையில் அமைதியை பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு கலெக்டர், ஐ.ஜி., டி.ஐ.ஜி உட்பட அதிகாரிகளை குற்றவாளிகளாக்கி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது .
அன்றைய முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி உட்பட அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். நடந்த சம்பவத்திற்கு அவருக்கும் தொடர்பு உள்ளது. என்ற அடிப்படையில், அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
14 பேர் மரணத்திற்கு காரணமாக இருக்கிறவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். கோவையில் கடந்த 23-ந் தேதி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விபத்து நடைபெற்றவுடன் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் துரிதமாக கைது செய்திருப்பது பின்னணியை ஆய்வு செய்திருப்பது பாராட்டத்தக்கது. நேற்று முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் பன்னாட்டு கூட்டணி சம்பந்தப்பட்டிருக்கும் சூழலில் இதனை தேசிய புலனாய்வு முகமை விசாரணை வைக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருப்பது நல்ல நடவடிக்கை.இப்படியான சம்பவம் நடைபெறுவதற்கான முகாந்திரங்களை ஏன் உளவுத்துறை கண்டுபிடிக்க முடியவில்லை. உளவுத்துறையில் உள்ள குறைபாடுகளை தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். இந்தக் குறை எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.என்.ஐ.ஏ பணியிலும் மந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த எதார்த்தத்தை என்.ஐ.ஏ ஒத்துக்கொள்ள வேண்டும்.கோவை மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்த அறிக்கை விட்டோம். அதன்படி 3 போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், உளவுத்துறை பலப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்டிருப்பவர் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர் என்பதாலேயே அந்த மதத்தை ஒட்டுமொத்தமாக விரோதமாக பார்க்கக்கூடிய பார்வைக்கு இடமளிக்கக்கூடாது. மாவட்ட கலெக்டரை சந்தித்த பிறகு அனைத்து ஜமாத் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் வரவேற்கத்தக்க வகையில் உள்ளன.
எனவே கோவையில் மத அடிப்படையில் குற்றம்சாட்டப்படுவது, மதத் தீவிரவாதிகள் என்ற பெயரில் ஒரு மதத்தை குற்றம் சாட்டுவது போன்ற நிலைக்கு இடமளித்து விடக்கூடாது. இந்த சூழ்நிலையில் வருகிற 31-ந் தேதி பா.ஜ.க முழு அடைப்பு என்று அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் இது தேவையா என்பதை அவர்கள் தான் யோசிக்க வேண்டும். முழு அடைப்பு நடத்துவதற்கான அவசியம் என்ன இருக்கிறது?
அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்ற நோக்கத்தோடும், அமைதிக்கு பங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் முழு அடைப்பு போன்ற போராட்டங்கள் அவசியமற்றது. இன்று இருக்கக்கூடிய பதற்றமான சூழலில் அரசியல் செய்வதும் அரசியலுக்காக முழு அடைப்பு செய்வதும் பயன் அளிக்காது. அது மேலும் மேலும் பதற்றத்தைத் தான் அதிகரிக்கும்.அப்படியான சூழலுக்கு கோவையில் யாரும் இடம் கொடுக்கக் கூடாது. இந்த முழு அடைப்பு தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் கலந்தாலோசித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.