மனைவியிடம் அடிக்கடி செல்போனில் பேசிய தனியார் நிறுவன மேலாளருக்கு கத்தி குத்து கணவர் உட்பட அவரது நண்பர்கள் 3 பேர் கைது..!

கோவை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் சோனைமுத்து( வயது 37) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர் . சோனைமுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவை அவிநாசி ரோடு அண்ணா சிலை அருகே உள்ள தனியார் வங்கியில் கடன் பிரிவு மேலாளராக வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு அதே வங்கியில் ஊழியராக வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது .அவர்கள் நட்பாக பழகி வந்தனர்.பின்னர் சோனைமுத்து அந்த பணியை விட்டு மற்றொரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலைக்கு சேர்ந்தார். இதற்கிடையில் வங்கியில் பணியாற்றிய போது அவருடன் நட்பாக பழகிய பெண் சுகுணாபுரத்தைச் சேர்ந்த சல்மான் பாரிஸ் ( வயது 23) என்பவரை திருமணம் செய்தார் .அதன் பிறகும் சோனைமுத்து அந்த பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தார். இது சல்மான் பாரிசுக்கு தெரியவந்தது. இதில் ஆத்திரமடைந்த அவர் சோனைமுத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று சோனைமுத்து ஆனைகட்டி சென்று விட்டு கோவைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை செல்போனில் தொடர்பு கொண்ட சல்மான் பாரிஸ் உங்களிடம் தனியாக பேச வேண்டும் வ உ சி பூங்காவுக்கு வாருங்கள் என்று கூறினார். இதை ஏற்று அங்கு சோனைமுத்து சென்றார். அப்போது சல்மான் பாரிஸ் தனது நண்பர்களான மதுக்கரை மார்க்கெட்டை சேர்ந்த அக்பர் சாதிக், கோட்டைமேடு முகமது அஸ்கர் ஆகியோருடன் சேர்ந்து அவரிடம் தனது மனைவியுடன் செல்போனில் பேசுவதை குறித்து கேட்டு கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சல்மான் பாரிஸ் தனது நண்பனுடன் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி சோனை முத்துவை காரில் கடத்திச் சென்று தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் குத்தினார்கள். அப்போது வலிதாங்க முடியாமல் சோனைமுத்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் .என்று கத்தினார். இதை கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து மீட்டு அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் சோனைமுத்து புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணின் கணவர் சல்மான் பாரிஸ், அக்பர் சாதிக், முகமது அஸ்கர் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.