கோவையில் 186 விநாயகர் சிலைகள் கரைப்பு- பாதுகாப்பு பணிக்கு போலீசார் குவிப்பு..!

கோவையில விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநகரில் உள்ள விநாயகர் கோவில்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன .அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். கோவை மாநகரில் இந்து முன்னணி சார்பில் 308 விநாயகர் சிலைகளும்,இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் 120 சிலைகளும், பாரத் சேனா 40 மற்றும் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாநகர பகுதியில் மொத்தம் 538 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன.இதேபோல புறநகர் பகுதிகளில் 1,556 விநாயகர் சிலைகள் வைக்கபட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,094 சிலைகள் வைக்கப்பட்டன. இது தவிர பொதுமக்களும் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.இந்த விநாயகர் சிலைகள் குறிச்சி குளம், சிங்காநல்லூர் குளம், முத்தண்ணன் குளம், மற்றும் குனியமுத்தூர் போத்தனூர் பகுதியில் உள்ளகுளங்களிலும், புறநகர் பகுதியில் உள்ள சிலைகள் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகள், ஆறுகளிலும், கரைக்கப்பட உள்ளன.இதில் முதல் கட்டமாக கோவை குனியமுத்தூர் போத்தனூர் சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 186 விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இதில் இந்து அமைப்பினர் உற்சாகமாக மேளதாளம் முழங்க சிலைகளை கொண்டு வந்தனர். இதை யடுத்து விநாயகர் சிலைகள் குறிச்சி குளம், குனியமுத்தூர் குளம் உள்ளிட்ட குளங்களில் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக விநாயகர் சிலைகள் வாகனங்களில் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன. அவ்வாறு எடுத்து வரப்பட்ட சிலைகளுக்கு கரைக்கும் இடத்தில் பூஜை செய்யப்பட்டது இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்கும் சிலைகளை கரைக்கும் பணியில் நீச்சல் பயிற்சி பெற்ற தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். அங்கு அதிரடிப்படை போலீசார் ,ஆயுதப்படை போலீசார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டது. மொத்தம் 186 சிலைகள் நேற்று கரைக்கப்பட்டன.விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கோவை மாநகரில் உள்ள மீதமுள்ள சிலைகள் நாளை( ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது..