1600 கோடி சொத்துக்கள் முடக்கம்.. சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்ட 14 தொழிலதிபர்கள் மீது எடுத்த நடவடிக்கை செல்லும்- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.1600 கோடி ரூபாய் மூலம் பல்வேறு சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக 14 தொழிலதிபர்கள் மீது வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ரூ.1000, ரூ.500 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது தன்னிடமிருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மூலம் சுடார் ரூ.1500 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பினாமிகள் பெயர்களில் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரகசிய தகவல்களின் அப்படையில் போலி நிறுவனங்களை நடத்தியது அந்த நிறுவங்கள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது வரி ஏய்ப்பு செய்தது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் என சுமார் 187 இடங்களில் வருமான வரித்துறையினர் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக அவரது பினாமிகள் வீடுகளிலும் பெரம்பூர் பகுதியை சேர்ந்த வி.எஸ்.ஜே.தினகரன் என்பவரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனைகளில் ஏராளமான முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வருமான வரித்துறை சோதனையில் ரூ.1,600 கோடி பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகள் மூலம், பல்வேறு சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டுள்ளதாக கூறி கங்கா பவுண்டேஷன், வி.எஸ்.ஜே. தினகரன், ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள், பாலாஜி, ஓஎம்ஆர் சாலையில் உள்ள மார்க் ஸ்கொயர் ஐ.டி. பார்க், புதுச்சேரி ஓசன் ஸ்பிரே உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது.

இதையடுத்து, அவர்கள் மீது பினாமி சட்டம் பாய்ந்தது. இதை எதிர்த்து வி.எஸ்.ஜே.தினகரன், பாலாஜி, கங்கா பவுண்டேஷன் உள்பட 14 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை, விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமந்த் வருமான வரித்துறை நடவடிக்கையில் தலையிட முடியாது எனக்கூறி அனைத்து மனுக்களையும தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து வி.எஸ்.ஜே தினகரன், ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள் பாலாஜி, உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகளை பெற்று இடத்தை விற்பனை செய்ததாக கூறுவது தவறு. ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இடத்தை விற்பனை செய்துள்ளோம். அதனால், எங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தை பயன்படுத்த முடியாது. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டனர். வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடும் நிதி நெருக்கடி காரணமாக ஸ்பெக்ட்ரம் மாலை விற்பனை செய்ய உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்காக அவர்கள் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் மூலம் சசிகலாவின் வழக்கறிஞரை அணுகியுள்ளனர்.

இந்த சந்திப்பு பண மதிப்பிழப்புக்கு முன் நடந்தது. ஸ்பெக்ட்ரம் மாலுக்கான தொகையை உரிமையாளர்களுக்கு வழங்க மேற்கொண்ட நடைமுறை, வாங்குபவரின் பெயர் இல்லாமல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, அவர்கள் மீது பினாமி சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்த சரிதான் என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட, நீதிபதிகள், மனுதாரர்களுக்கு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய சட்டத்தில் உள்ள அனைத்து வாயப்புகளும் தரப்பட்டுள்ளது. அதன் பிறகே வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை தனி நீதிபதியும் உறுதி செய்துள்ளார். தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட போதுமான காரணங்கள் இல்லை. எனவே இந்த மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.