ராமேஸ்வர மீனவர்கள் 15 பேரை பிடித்து இலங்கை கடற்படை அட்டகாசம்… மீண்டும் வெடித்தது வேலை நிறுத்த போராட்டம்.!

ராமநாதபுரம்: வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 15 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்து இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 5 நாட்களுக்கு முன்பாக மீனவர்கள் ஏராளமான மீன்பிடி படகுகளில்ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே அவர்கள் தங்கி மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் வழக்கம்போல் வேலையை காட்டி உள்ளார்கள்.

தமிழ்நாடு மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டு இருந்ததாக கூறி கைது செய்தனர். 15 மீனவர்களை கைது செய்து 2 படகுகளையும் கைப்பற்றி உள்ள இலங்கை கடற்படையினர் அவர்களை காங்கேசந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதால் மீனவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க தொடங்கி மூன்று வாரமே ஆகியுள்ள நிகழ்ந்த 3 வது கைது நடவடிக்கை இது. முதலில் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை எச்சரித்து விடுதலை செய்தது. அதன் பின்னர் கடந்த 21 ஆம் தேதி 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பாகவே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், நேற்று 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். ஏற்கனவே கைதாகி விடுதலை செய்யப்பட்டு உள்ள 22 தமிழக மீனவர்களின் படகுகள் நாட்டு உடமை ஆக்கப்பட்டு உள்ளன. மீண்டும் கைது செய்யப்பட்டால், 2 அல்லது 3 ஆண்டுகள் சிறை வைக்கப்படுவார்கள் என்று இலங்கை நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது.

இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளார்கள். கைது செய்யப்பட்ட 15 பேரையும் விடுதலை செய்திட அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மீனவர்களின் போராட்டம் காரணமாக 700 விசைப்படகுகளை கரையிலேயே நிறுத்தி வைத்து உள்ளனர். ஒரு நாளைக்கு ரூ.6 முதல் ரூ.8 கோடி வரை இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படுவதாக மீனவ அமைப்புகள் தெரிவித்து இருக்கின்றன.