தொடர் விடுமுறை ஒட்டி.. ஒரே நாளில் சென்னையில் இருந்து 1,42,062 பேர் பேருந்துகளில் பயணம்..!!

தொடர் விடுமுறை காரணமாக, நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1,42,062 பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஆம்னி பேருந்து கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமாக சென்னையில் இருந்து திருச்சிக்கு அதிகபட்சம் 800 வரை வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 2,300 ரூபாய் வரை அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

அதேபோல, சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல அதிகபட்சமாக 1,000 ரூபாய் வசூல் செய்யப்பட்ட வந்த நிலையில், தற்பொழுது 3,000 ரூபாய் வரை அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். ஆம்னி பேருந்துகளின் கூடுதல் கட்டண வசூலித்ததால்கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் கூடுதலாக 357 பேருந்துகள் இயக்கப்பட்டன.

தொடர் மூன்று நாள் விடுமுறையை ஒட்டி போக்குவரத்து துறையிலிருந்து நேற்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தினசரி 1,950 பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்குப் பயணம் மேற்கொள்ளும். இந்நிலையில், விடுமுறை நாள் என்பதால் 425 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை நேற்று அறிவித்திருந்த நிலையில், 357 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டுள்ளன. நேற்று சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 2,732 பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று மட்டும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 1,42,062 பயணிகள் பயணம் செய்தனர். இதில் திருச்சி , மதுரை மற்றும் சேலத்திற்கு அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறையினர் தெரிவித்துள்ளனர்.