காரமடையில் 1244 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் – 622 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் – 8 பேர் கைது..!

கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய பகுதிகளில் சப்- இன்ஸ்பெக்டர். சுல்தான் இப்ராஹிம், ஏட்டு சிவப்பிரகாஷ் ஆகியோர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது கண்ணார்பாளையம் பிரிவு சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் கைப்பையுடன் நின்று கொண்டிருந்த 4 நபர்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சூரை சேர்ந்த தினேஷ்(23), ஆனந்த்(25), காரமடையை சேர்ந்த சுரேஷ்குமார்(41) மற்றும் திருவாரூரைச் சேர்ந்த செந்தில்குமார்(43) என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்து பார்த்தபோது 26 கட்டுகள் கூடிய மொத்தம் 650 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது சுரேஷ்குமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் பழைய கட்டிடங்களை தகர்த்துக் கொடுக்கும் தொழில் செய்து வரும் காரமடையை சேர்ந்த ரங்கராஜ் என்பவரிடம் வேலை செய்து வருவதாகவும், மேற்படி ரங்கராஜ் பழைய கட்டிடங்களை தகர்ப்பதற்கு வெடி பொருளை எவ்வித உரிமமும் இல்லாமல் பயன்படுத்தி வருவதாகவும், அவ்வாறு பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் டெட்டனேட்டரில் சிலவற்றை அதிவிலைக்கு
சட்டத்துக்கு புறம்பாக கேரளாவிற்கு விற்று லாபம் சம்பாதித்து வருவதாக தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் ரங்கராஜ் என்பவரை கைது செய்து அவரை விசாரிக்க, அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது வேலை நடந்து வரும் மற்றொரு இடத்திலிருந்து எவ்வித உரிமம் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 622 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 350 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேற்படி வெடிபொருட்களை ரங்கராஜ் என்பவர் சிறுமுகை சேர்ந்த பெருமாள், அன்னூரை சேர்ந்த கோபால் மற்றும் காரமடையை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோர்களிடமிருந்து வாங்கியுள்ளதாக தெரியவந்தது. இது பற்றி தகவல் தெரிந்ததும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நேரில் விசாரணை நடத்தினார். பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 1244 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகளையும் பார்வையிட்டார். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவித்தார்.