பொள்ளாச்சியில் காரில் கடத்தப்பட்ட 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- டிரைவர் கைது.!!

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி, அமைதி நகர் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொள்ளாச்சி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்குரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கோபிநாத்,சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன்,மற்றும் போலீசார் நேற்று அங்கு தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 21 மூட்டைகளில் தலா 50 கிலோ எடை கொண்டு ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. 1050 கிலோ ரேஷன் அரிசியும் , காரும் பறிமுதல் செய்யப்பட்டது . இது தொடர்பாக பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை சேர்ந்த கார் டிரைவர் அஜித்( வயது 23) என்பவரை கைது செய்தனர் .அவரிடம் நடத்தி விசாரணையில் ரேஷன் அரிசியை பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் வாங்கி அதிக விலைக்கு விற்க கேரளாவுக்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது.