தற்கொலை செய்ய டீசல் கேனுடன் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த இளம் பெண்ணால் பெரும் பரபரப்பு..!!

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது இதில் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தங்களது குறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை கலெக்டர் சமீரனை சந்தித்து அளித்தனர். குறை தீர்ப்பு முகாமையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் மனுக்கள் அளிக்க வரும் பொது மக்களை சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். இந்நிலையில்,
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள பி.என்.டி காலனியை சேர்ந்தவர் மனோகரன் என்பவரது மகள் சரண்யா (வயது 30) பிபிஏ பட்டதாரியான இவர் கையில் ஒரு பையில் டீசல் கேனுடன் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றார். போலீசார் அவரிடம் இருந்த டீசல் கேனை பறித்தனர். பின்னர் போலீசார் சரண்யாவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கும் தாராபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென செந்தில்குமார் என்னை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார். பலமுறை அவரை தொடர்பு கொண்டு திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டேன். பின்னர் நேரில் சென்ற போது செந்தில்குமாரை என்னை பார்க்க விடாமல் அவரது உறவினர்கள் நாயை அவிழ்த்துவிட்டு என்னை துரத்தி விட்டார்கள். இதன் காரணமாக எனது மனநிலையும், உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. எனவே செந்தில்குமாரை எனக்கு திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி தற்கொலை செய்யும் எண்ணத்தில் டீசல் கேனுடன் வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் நிச்சயம் செய்து ஏமாற்றிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.