கணதியில் தொழிலாளி படுகொலை: பீடி தர மறுத்ததால் கல்லை தலையில் போட்டு கொன்றோம்- குற்றவாளி 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்..!

கோவை கணபதி அருகே உள்ள பொன்னையா வீதியை சேர்ந்தவர் வெங்கட்ராஜ் என்ற வெங்கடேஷ் (வயது 49). கூலித் தொழிலாளி.

இவர் கணேஷ் லே-அவுட்டில் உள்ள மாநகராட்சி நகர்நல மைய வளாகத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த தகவல் கிடைத்ததும் சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட வெங்கடேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரை கணபதி ராஜவீதியில் உள்ள பிளாட்பாரத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வரும் நஞ்சுண்டாபுரத்மோதை சேர்ந்த கன்ராஜ் (26), நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த சரவணன் (19) என்பது தெரிய வந்தது.
போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நாங்கள் 2 பேரும் பிளாட்பாரத்தில் தங்கி இருந்து வருகிறோர். சம்பவத்தன்று இரவு நாங்கள் 2 பேரும் மது போதையில் இருந்தோம். அப்போது வெங்கடேஷ் போததையில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். இதனை பார்த்த நாங்கள் அவரிடம் சென்று பீடி கேட்டோம். அவர் கொடுக்க மறுத்து விட்டார். மேலும் எங்களது தாய் குறித்தும், குடும்பதினர் குறித்து அவதூறாக பேசினார். இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து நாங்கள் அங்கு இருந்த கல்லை எடுத்து அவரது தலையில் தாக்கினோம். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து இறந்தார். பின்னர் நாங்கள் தலைமறைவாக இருந்தோம். போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினார்.
பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.