அதிமுகவை நாங்கள் ஏன் கூட்டணிக்கு கூப்பிட வேண்டும் – திருச்சியில் அண்ணாமலை பேட்டி.!!

என் மண் என் மக்கள் பாத யாத்திரையில் ஈடுபட்டிருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
மோடியை விட்டா வேறு பிரதமர் வேட்பாளர் இல்லையா என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளாரே?
ஒரு முன்னாள் அமைச்சரான கே.பி.முனுசாமி பேசுவது சரியா? கே.பி.முனுசாமிக்கு அண்ணாமலை மீது வன்மம். அவருடைய பாணியிலேயே பதில் சொல்கிறேன். அதிமுகவுக்கு எப்படி ஒரே ஒரு புரட்சித் தலைவர் இருந்தாரோ? தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு எப்படி ஒரே ஒரு காமராஜர் இருந்தாரோ? அதே போல ஒரே ஒரு மோடிதான்.
தமிழகத்தில் முதலமைச்சர் வேட்பாளர்கள் பலர் உள்ளனர். மற்ற தலைவர்கள் இருக்கலாம். ஆனால் மோடி போல் உருவாக முடியாது. அவர்களை பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு இரண்டே கட்சிகள்தான் இருக்க வேண்டும். இந்த பங்காளி போனால், அந்த பங்காளி. அந்த பங்காளி போனால் இந்த பங்காளி.
கூட்டணி இல்லை என்று எடப்பாடி தெளிவாக சொல்லிவிட்டார்…. ஆனால் நீங்கள்…
நாங்கள் எதற்கு சொல்ல வேண்டும். என்.டி.ஏ எங்களிடம் இருக்கிறது. வருகிறவர்கள் வரட்டும், போகிறவர்கள் போகட்டும். என்.டி.ஏ. என்பது பாஜக உருவாக்கியது. கதவு, ஜன்னல்கள் எல்லாம் திறந்துதான் இருக்கிறது. மோடியை ஏற்றுக்கொள்கிறவர்கள் வரலாம்.
திமுக மாநாடு பற்றி
திமுக மாநாட்டின் தீர்மானங்களில் ஒன்றுக்காவது தகுதி இருக்கிறதா. இந்த மாநாடு என்பது நமத்துபோன ஒரு மிக்சர். சேலத்தில் குப்பையை நிரப்பியது மட்டும்தான் மிச்சம்.
நீங்கள் நடு நிலைமை என்று சொல்கிறீர்கள். திமுகவை கடுமையாக தாக்குகிறீர்கள். அதிமுக ஃபைல்ஸை ஏன் வெளியிடுவதில்லை?
பத்திரிகையாளராக நீங்கள் ஏன் அதை செய்யவில்லை. அண்ணாமலை என்ற ஒரு மனிதன் தான் 2ஜி ஃபைல்ஸை விட வேண்டும். ஊழலை பற்றி தகவல் திரட்டி வெளியிட வேண்டும். ஏதாவது ஒரு பத்திரிகை, 31 மாதத்தில் திமுகவின் ஊழலை பற்றி பேசியிருக்கிறதா?
இங்கு செய்தி வெளியிட்டால் டிஎன்டிஐபி-ஆரில் இருந்து போன் வருகிறது. அண்ணாமலை செய்தி அதிகமாக போடுவது போல் இருக்கிறது, பட்ஜெட் விளம்பரம் வேண்டுமா? வேண்டாமா? என கேட்கிறார்கள்.
என்னை பொறுத்தவரை எல்லாவற்றையும் நான் பேசுகிறேன். நான் ஒரு அரசியல் தலைவர் என்ற கோட்பாட்டுக்குள் பேசுகிறேன்.
அடுத்த ஆடியோ எப்போது வெளியாகும்?
இப்போது 2ஜி ஃபைல்ஸ் போய் கொண்டிருக்கிறது. மொத்தம் 9 ஆடியோ இருக்கிறது. இப்போது 2 முடித்திருக்கிறோம். வருகிற நாட்களில் அடுத்த தலைவர்கள் பேசியதெல்லாம் வெளியே வரும்.
பிரதமர் மோடி இரண்டு முறை திருச்சி வந்துள்ளாரே? இந்த முறையாவது திருச்சியில் உள்ளூர் வேட்பாளர்களை நிறுத்துவீர்களா? அல்லது நீங்களே நிற்பீர்களா?
திருச்சி சரித்திர புகழ்பெற்ற நகரம். தமிழ்நாட்டில் தலைநகராக மாற்ற வேண்டும் என்ற பேச்செல்லாம் இருந்தது. குமாரமங்கலம் ஐயா இருந்த போது, மத்திய அரசிடம் சொன்னால் எல்லாம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததோ அது மீண்டும் வரவேண்டும். அப்படியானால் பாஜக இங்கு களமிறங்கி வெற்றி பெற வேண்டும். அந்த வேட்பாளர் பிரதமர் மோடிக்கு நேசமானவராக இருக்க வேண்டும். காரணமாகத்தான் பிரதமர் மோடி திருச்சிக்கு வந்தார்.
பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் நிற்க வாய்ப்பிருக்கிறதா?
534 தொகுதிக்கும் அவர்தான் வேட்பாளர்.
2014 -19ல் இரண்டு தேர்தலிலுமே தமிழ்நாடு மக்கள் மோடியை ஏற்றுக்கொள்ளவில்லை என்று முதல்வர் கூறியுள்ளாரே?
234 தொகுதிகளிலும் 2 எம்.எல்.ஏ.க்களை மட்டும் பெற்றது திமுகவின் சரித்திரம். நாங்கள் பூஜ்ஜியம் வாங்கினோம், ஆனால் பாஜக வெற்றி பெறவில்லை என்று சொன்னவர். அவர் பலவீனமடைந்துவிட்டார். 2024 தேர்தலில் எப்படி வரும் என அவர் பதறிக்கொண்டிருக்கிறார்.
தாடி வளர்க்கிறீர்களே என்று கேட்டதற்கு
ஒரு நேர்த்திக்கடன் இருக்கிறது. சாமிக்கு விட்டிருக்கிறேன் என்று பதிலளித்தார். பேட்டியின் போது திருச்சி மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்