பாஜக மாவட்ட தலைவரை கைது செய்தது ஏன்..? திமுகவின் சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் – அண்ணாமலை ட்வீட்..!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியானது அதில், ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன்.

எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற வகையில் பேசியிருந்தார். இதற்க்கு அதிமுக, பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தது. இந்தநிலையில் கோவை பீளமேட்டில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மாவட்ட தலைவர் உத்தம பாலாஜி, ” தைரியம் இருந்தால் கோவையில் கால் வைத்து பார் ” என நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் சில கடுமையான சொற்களையும் பதிவு செய்திருந்தார்.

இந்தநிலையில், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உட்பட 3 பிரிவுகளில் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்த பீளமேடு போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை அழைத்துச் சென்றனர்.இதனையடுத்து அவரது கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஆ.ராசா அவர்களை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை வெறுப்பை உமிழும் ஆ ராசாவை கண்டித்ததற்காக கோவை மாநகர் மாவட்ட தலைவர் திரு உத்தம பாலாஜியை காவல்துறை இன்று காலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது.

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் ஆ.ராசாவை கைது செய்யாமல், திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக மாவட்டதலைவரைக் கைது செய்தது ஏன்? திமுக அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்