எங்கள் மீது அவதூறு பரப்பிய அண்ணாமலை மீது வழக்கு தொடர்வோம் – அமைச்சர் நேரு பேட்டி..!

மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டமாக “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்கிற முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி வரும் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை 8 நாட்கள் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

இதில் 325-க்கும் மேற்பட்ட புகைப்படங்களுடன் ஏறத்தாழ 12 ஆயிரம் சதுர அடி அரங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி ஏற்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இந்த கண்காட்சி நடத்தப்படுவதன் நோக்கம் தமிழகத்தில் அநேக முதலமைச்சர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பின்புலமும், உழைப்பும் இருந்துள்ளது. அதேபோல் தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்யக்கூடிய தமிழக முதல்வர் கடந்த 40 ஆண்டு காலமாக தன்னுடைய உழைப்பால் இந்த முதலமைச்சர் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளார். எனவே, அவருடைய வாழ்க்கைப் பயணங்கள் அடங்கிய இந்த கண்காட்சியானது பல மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் அரசியல் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமையும் என்றார்.

மேலும், திருச்சியின் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கான 35 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. வருகிற டிசம்பர் மாதம் பேருந்து நிலையம் திறக்கப்படும். தமிழகத்தில் உள்ள கோவை, சேலம், திருச்சி ஆகிய சிறைச்சாலைகள் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளன. கோவை செம்மொழி பூங்காவாகும், சேலம் சிறை விளையாட்டு திடலாகவும், திருச்சி சிறைக்கு 173 ஏக்கர் நிலம் முதற்கட்டமாக ஆட்சியர் மூலம் பார்க்கப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் பெற்று சிறைச்சாலை மாற்றப்படும்.

திருச்சி காந்தி சந்தை (காந்தி மார்கெட்) அதே இடத்தில் 11கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு செயல்படும். தனக்கு மருத்துவமனை, கல்லூரி இருப்பதாக அண்ணாமலை கூறி இருப்பது குறித்த கேள்விக்கு எனக்கு அந்த மருத்துவமனையை வாங்கி தாருங்கள். அதை ஏழு மருத்துவர்கள் நடத்துகிறார்கள். கட்சி நடத்துவதற்காக வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார் அண்ணாமலை என்றார்.

அண்ணாமலை வேண்டுமென்றால் வழக்கு தொடரட்டும் அதை சந்திக்க நாங்கள் தயார். அதேபோல் அதிமுகவின் திட்டங்களை திமுக முடக்கவில்லை. திமுகவின் திட்டங்களை தான் அதிமுக முடக்கியது என்றார்.