ரயில்வே துறை வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்கள் கொடுத்து பல பேரிடம் நூதன மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் கோவை நபர் மீது பரபரப்பு புகார்.!!

ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்கள் கொடுத்து, நூதன மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை சேர்நதவர் ஸ்ரீஜித் (28). பி.டெக் பட்டதாரி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வேலை தேடி கோவை வந்துள்ளார். அப்போது, கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள (நியூ ஜாப் பிளேஸ்மென்ட் சர்வீஸ்) என்ற தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தை வேலை நிமித்தமாக சென்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த முருகா என்பவர் ரயில்வே துறை டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.6 லட்சம் செலவாகும், என கூறியுள்ளார். மேலும், ஸ்ரீஜித்தை நம்ப வைக்க, இவர் மூலம் வேலை கிடைத்தவர்கள் என சில ஆவணங்களை காண்பித்ததாக தெரிகிறது. இதை நம்பிய ஸ்ரீஜித், வெளியே கடன் வாங்கி ரூ.6 லட்சம் பணத்தை முருகாவிடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, சிறிது நாள் கழித்து, ஸ்ரீஜித்திற்க்கு கொல்கத்தாவில் வேலை கிடைத்துவிட்டதாகவும், பயிற்சி முடிந்தவுடன் பணியில் சேரலாம் எனக் கூறி கொல்கத்தாவிற்கு, அவரை முருகா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும், மத்திய ரயில்வே துறையின் பணியானை மற்றும் அடையாள அட்டையை, ஸ்ரீஜித்திற்க்கு வழங்கியுள்ளார். இதையடுத்து, அங்கு தனியாக அறையெடுத்து தங்கிய நிலையில், தினமும் யாராவது ஒரு நபர் இவர்களது அறைக்கே வந்து ரயில்வே துறையில் பணியாற்றுவது தொடர்பாக பயிற்சி வழங்கியுள்ளனர். இதையடுத்து, நீண்ட நாட்களாக ஊதியமும், பணியில் சேராமலும், வருகை பதிவேட்டில் கையெழுத்து ஏதும் வாங்காததல் சந்தேகமடைந்த, ஸ்ரீஜித், இது குறித்து முருகாவிடம் விசாரித்துள்ளார்.

அப்போது அவர், தமிழகத்திற்கு பணிமாறுதல் செய்ய ஏற்பாடுகள் செய்து வருவதாக கூறி தொடர்ந்து ஸ்ரீஜித்தை ஏமாற்றியுள்ளார். மேலும், கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என கூறி சொந்த ஊருக்கு அவரை அனுப்பியுள்ளார். ஆனால், அதற்கு பின் தொடர்பு கொண்ட போது முருகா போனை எடுக்காமல் வேண்டுமென்றே விலகி சென்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஸ்ரீஜித் விழுப்புரம் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் அழைத்து விசாரித்த போது பணத்தை திரும்ப தருவதாக கூறியுள்ளார். அதன் பிறகு, சிறு தொகையை மட்டும் திருப்பி கொடுத்த நிலையில், மீண்டும் போனை எடுக்காமலும், பணத்தை கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, விசாரித்த போது அவர் ஏற்கனவே இதே போல் விழுப்புரத்தை சேர்ந்த மேலும் பலரிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வாங்கி ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட அனைவரும் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், மத்திய ரயில்வே வேலை எனக் கூறி போலியாக பணியாணை, அடையாள அட்டை உள்ளிட்ட வழங்கி மோசடியில் ஈடுபட்ட முருகா என்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும், என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதே போல், விழுப்புரத்தை சேர்ந்த பெண்ணிடமும் மத்திய அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.5 லட்சம் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணும் தனது குழந்தையுடன் வந்து மனு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.