ஒரே நாளில் ரிலீசான வாரிசு – துணிவு… ரகளையில் ஈடுபட்ட தல, தளபதி ரசிகர்கள்… திரையரங்குகளில் போலீசார் தடியடி..!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள துணிவு திரைப்படமும், வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள வாரிசு திரைப்படமும் இன்று வெளியாகின. நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படமும் திரையிடப்பட்டது. தமிழ் திரையுலகில் இருதுருவங்களாக ரசிகர்களால் பார்க்கப்படும் அஜித் – விஜய் படங்கள் பொங்கல் பண்டிகைக்கு 8 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரடியாக மோதுவதால், இரு தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு திரையரங்குகளில் குவிந்தனர்.

இதே போல, காஞ்சிபுரத்தில் உள்ள திரையரங்கின் முன்பு குவிந்த ரசிகர்கள், நடனமாடி மகிழ்ந்தனர். பட்டாசுகளை வெடித்து துணிவு படத்தை அஜித் ரசிகர்கள் வரவேற்றனர். சென்னை ரோகினி திரையங்கு முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால், பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. துணிவு மற்றும் வாரிசு என இரண்டு படங்களும் அடுத்தடுத்து திரையிடப்பட்டன. இதனால், இரு தரப்பு ரசிகர்களும் பெருமளவில் திரண்டிருந்தனர். அப்போது, துணிவு பட பேனரை விஜய் ரசிகர்கள் கிழித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள் வாரிசு படத்தின் பேனரை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்களிடையே மோதலை தவிர்க்க திரையரங்கில் இருந்து அனைவரையும் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி வெளியேற்றினர்.

இதையடுத்து, மீண்டும் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்ட போது, சிலர் கற்களையும், கையில் கிடைத்த பொருட்களையும் தூக்கி எரிந்தனர். இதனால், திரையரங்கின் முன்புறம் இருந்த கண்ணாடி உடைந்து நொறுங்கியது.