வன்னியர் 10.5 இட ஒதுக்கீடு… யாருக்கும் பாதகம் ஏற்படாது – முதல்வரிடம் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.!!

இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே 10.5% இடஒதுக்கீட்டை கொண்டு வரலாம் என அன்புமணி ராமதாஸ் பேட்டி.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.இச்சந்திப்பில் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.

அப்போது, வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு குறித்து புள்ளிவிவரங்கள் கொண்ட அறிக்கையை தயார் செய்து, நடப்பு கூட்டத்தொடரிலேயே புதிய சட்டம் இயற்ற வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக கூறப்பட்டது. வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், மீண்டும் சட்டம் கொண்டு வர வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். தேவையான தரவுகளை திரட்டி நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். வன்னியர் இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதகம் ஏற்படாது. தமிழக அரசு நீதிமன்றத்தில் தரமான வழக்கறிஞர்களை வைத்துதான் வாதாடியது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே 10.5% இடஒதுக்கீட்டை கொண்டு வரலாம் என்றும் தெரிவித்தார்.