புதிய வகை “எக்ஸ் இ” கொரோனா தமிழகத்தில் இல்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!!

மும்பையில் பரவியதாக கூறப்படும் புதிய வகை “எக்ஸ் இ” கொரோனா தமிழகத்தில் பரவவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவின் ஆல்பா, பீட்டா, ஒமிக்ரான் என பல்வேறு வகைகளும் பரவி மக்களை பாதித்து வருகிறது. ஒமிக்ரானை விட வேகமாக பரவும் ஒமிக்ரானின் புதிய திரிபான “எக்ஸ்இ” என்ற தொற்று சமீபத்தில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் மும்பை பகுதியில் “எக்ஸ்இ” வகை கொரோனா கண்டறியப்பட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்திருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மும்பையில் உறுதி செய்யப்பட்டது ‘எக்ஸ்இ’ ரக வைரஸ் என்பதை நிரூபிக்க போதுமானதாக இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மும்பையில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்ட வைரஸ் வகை எக்ஸ் இ இல்லை என்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ள அவர் தமிழகத்தில் அந்த வைரஸ் எங்கும் பரவவில்லை என கூறியுள்ளார். கடந்த சில தினங்களாக சில மாவட்டங்களில் மட்டும் கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் அதனை கண்காணிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.