பிரதமர் மோடி தாயார் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு 100 வயதாகிறது. உடல்நலக்குறைவால் கடந்த 3 நாட்களுக்கு முன் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உடல்நலம் தேறி வந்தநிலையில் வயது மூப்பு காரணமாக ஹீராபென் மோடி காலமானார்.

இதையடுத்து, டெல்லியிலிருந்து வந்த பிரதமர் மோடி, காந்திநகரில், தாய் ஹீராபென் மோடிக்கு இறுதிச்சடங்குகளைச் செய்து அவரின் சிதையை எரியூட்டினார். ஆனால், சிலமணிநேரத்தில் தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பிரதமர் மோடி, அடுத்ததாக தனது அலுவல் பணிகளையும், அடுத்தடுத்த நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

பிரதமர் மோடியின் தாய் மறைவுக்கு உலகில் பல நாடுகளைச்சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ஜப்பான், இஸ்ரேல், பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து பிரதமர்கள் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், அவரின் மனைவி ஜில் பிடன்இருவரும் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். ட்விட்டரில் ஜோ பிடன் பதிவிட்ட கருத்தில் ” நானும், என் மனைவி ஜில் பிடனும் உங்கள் தாய் ஹீராபென் மோடி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறோம். பிரதமர் மோடிக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் இந்த கடினமான நேரத்தில் எங்கள் பிரார்த்தனைகளை வைக்கிறோம்” எனத் தெரிவித்தனர்

அமெரிக்க இந்தியா ராஜாங்க மற்றும் கூட்டுறவு அமைப்பு(யுஎஸ்ஐஎஸ்பிஎப்) தலைவர் முகேஷ் அகி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம். தாயை இழந்து வாடும் உங்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம், தாயார் ஆத்மா சாந்தி அடையட்டும்” எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகி மேட்டி மில்பென் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.