கொட்டி தீர்த்த கனமழையால் சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்..!

வெள்ள நீர் காரணமாக சென்னையில் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த 2 நாட்களாக இரவு பகல் என கன மழை பெய்து வருகிறது.

அதன் காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து 2 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் மழை நீர் அதிகம் தேங்கியுள்ள கணேசபுரம் மற்றும் ரங்கராஜபுரம் ஆகிய 2 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளது.

ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள் ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி நகர் ரவுண்டானா மற்றும் பேசின் பாலம் வழியாகவும் வெளியில் இருந்து உள்ளே வரக்கூடிய வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை, முரசொலி மாறன் பாலம் வழியாகவும் செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது