தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருட்டு பெண்ணை கைது – 13 சவரன் நகை பறிமுதல்..!

கோவை மாவட்டம் கோட்டூர் காவல் நிலைய பகுதியில் கோவில் திருவிழாவின் போது பழனியத்தாள், சிவபாக்கியம் மற்றும் துளசியம்மாள் ஆகிய மூன்று பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் 13 சவரன் தங்க செயின்களை திருடி சென்று உள்ளார். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட நபர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இப்புகாரில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்து குற்றவாளியை தேடிவந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கெளதமி என்பவர் இக் குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில் மேற்படி பெண் இதுபோன்ற பல திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்தது. இந்நிலையில் தனிப்படையினர் கௌதமியை கைது செய்து அவரிடம் இருந்து திருடிய 13 சவரன் நகையை பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் செயல்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், எச்சரித்து உள்ளார்.