நடுரோட்டில் பெண்ணை மிரட்டிய டாக்ஸி டிரைவர் – சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..!

கோவை திருச்சி சாலையில் பெண் ஒருவர் தனது காரில் வந்து கொண்டு இருந்தார். அப்பொழுது அவருக்கு பின்னால் வந்த வாடகை டாக்ஸி திடீரென அந்த பெண் வந்த கார் மீது மோதியது. இதில் கார் சேதமடைந்தது. இதனால் அந்த பெண் உடனடியாக காரை நிறுத்தி விட்டு வாடகை டாக்ஸி டிரைவரிடம் முறையிட்டார்.

இதனால் அவர்களுக்குடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது டிரைவர் கத்தியை எடுப்பது போல் பாவனை செய்து அந்த பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அச்சமடைந்த அந்தப் பெண் எதற்காக கத்தியை காட்டி மிரட்ட பார்க்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு டிரைவர் உன்னை குத்தாமல் விட்டேனே என்று சந்தோஷப்பட்டு கொள் என்றார். இந்த பரபரப்பு சம்பவத்தை அந்த வழியாக சென்றவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். தற்பொழுது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்பொழுது அவர்கள் இருவரும் கார் விபத்து தொடர்பாக வழக்கு எதுவும் வேண்டாம் என்றும் தெரிவித்தனர். மேலும் கார் சேதமடைந்ததற்கு வாடகை டாக்ஸி டிரைவர் அந்த பெண்ணிற்கு இழப்பீடு தொகை கொடுத்து உள்ளார். இதை அடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.