70 ஆண்டுகளுக்கு முன்பு 14 ஆக இருந்த தேசிய கட்சிகளின் எண்ணிக்கை 6 ஆக குறைவு.!!

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய 6 கட்சிகள் மட்டுமே தேசிய கட்சி அந்தஸ்து பெற்றுள்ளன.

1951-52-ல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் 53 அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. இதில் தேசிய அந்தஸ்து பெற்ற கட்சிகள் எண்ணிக்கை 14. இப்போது சுமார் 2,500 அரசியல் கட்சிகள் இருப்பதாக கருதப்படுகிறது. எனினும், கடந்த 70 ஆண்டுகளில் தேசிய அந்தஸ்து பெற்ற கட்சிகள் எண்ணிக்கை மட்டும் சரிவை சந்தித்துள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய 6 கட்சிகள் மட்டுமே தேசிய கட்சி அந்தஸ்து பெற்றுள்ளன.

இந்தியாவின் தேர்தல் பயணம் தொடர்பாக, ‘லீப் ஆப் பெயித்’ என்ற பெயரில் தேர்தல் ஆணையம் ஒரு நூலை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலுக்கு முன்பு தேசிய கட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என 29 அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால் 14 கட்சிகளுக்கு மட்டும் தேசிய கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது.

எனினும், தேர்தல் முடிவு சில கட்சிகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அதன் பிறகு, காங்கிரஸ், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜன சங்கம் ஆகிய 4 கட்சிகளால் மட்டுமே தேசிய கட்சி அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.