கோவையில் சூடு பிடித்துள்ளது தேர்தல் களம்… ஒரே மேடையில் ராகுலும், ஸ்டாலினும் பிரச்சாரம்.!!

கோவை: தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் முதல் கட்டமாக வருகிற 19 – ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. பிரதமர்  மோடி 7 முறை தமிழகம் வந்து சூறாவளி பிரச்சாரம் செய்து பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துள்ளார். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திருச்சியில் பிரசாரத்தை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார் . இதேபோல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் .இது தவிர அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கிய தலைவர்கள் ,சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சார களத்தில் அனல் பறக்கிறது. இந்த நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று ( வெள்ளிக்கிழமை) மாலை நெல்லை வருகிறார். முன்னதாக திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை தனியார் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் பொதுக்கூட்டம் நடைபெற கூடிய பாளையங்கோட்டை நெல்லை திருச்செந்தூர் ரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் மைதானத்திற்கு செல்கிறார். அங்கு பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் ராகுல் காந்தி இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ராபர்ட் ப்ரூஸ் (நெல்லை) கனிமொழி ( தூத்துக்குடி) ராணி ஸ்ரீ குமார் (தென்காசி) வெங்கடேசன் ( மதுரை) மாணிக்கம் தாகூர் (விருதுநகர்) நவாஸ் கனி ( ராமநாதபுரம்) கார்த்தி சிதம்பரம் ( சிவகங்கை) விஜய் வசந்த் (கன்னியாகுமரி)ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை 6:15 மணிக்கு கோவை வருகிறார். ராகுல் காந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அங்கிருந்து கார் மூலம் போத்தனூர் பக்கம் உள்ள செட்டிபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது கூட்ட மேடைக்கு செல்கிறார். அங்கு இரவு 7 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் ராகுல் காந்தியும், முதலமைச்சர் மு க ஸ்டாலினும் இணைந்த பிரசாரம் செய்கிறார்கள். அப்போது இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார் ( கோவை) ஈஸ்வர சாமி (பொள்ளாச்சி ) ஆகியோரைஆதரித்து வாக்கு கேட்டு பேசுகிறார்கள். இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி இரவு 8 – 15 மணிக்கு சிறப்பு விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். இதேபோல முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருப்பூர் செல்கிறார். அங்கு நாளை ( சனிக்கிழமை) நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். ராகுல் காந்தியின் வருகை முன்னிட்டு நெல்லை கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.