எந்தவித பந்தாவும் இல்லாமல் சிம்பிளாக லண்டன் வீதிகளில் சுற்றி திரியும் துபாய் பட்டத்து இளவரசர்-புகைப்படம் இணையத்தில் வைரல்..!!

வட்ட செயலாளர்ல துவங்கி, சதுர செயலாளர் வரைக்கும் டாடா சுமோ சகிதமாய் தொண்டர்கள் சூழ தெருக்களில் சுற்றி வருகிற அரசியல் காலம் இது.

லோக்கல் கவுன்சிலர் டெல்லிக்குப் போனாலே, அண்ணே… எங்க கவுன்சிலர் தெரியுமில்ல.. என பார்லிமெண்ட் வாசலில் டீக்கடைக்காரரிடம் அரைக்குறை இந்தியில் அலப்பறை செய்து வரும் நிலையில், எந்த விதமான ஆரவாரம்.. அடிபொடிகள்.. கட்-அவுட் கலாச்சாரம்.. ஆளுயர வரவேற்பு மாலை என்று எதுவுமில்லாமல், சாதாரண சுற்றுலா பயணியாக லண்டன் மாநகர வீதிகளில் சுற்றிக் கொண்டிருக்கிறார் துபாய் பட்டத்து இளவரசர்.

ஐக்கிய அமீரகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம். 39 வயதாகும் இவருக்கு அந்நாட்டு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக உள்ள இவர், எப்போதும் தனது அன்றாட நிகழ்வுகள், வளர்ப்பு விலங்குகள் குறித்து படங்களைப் பதிவிட்டு வருகிறார். இதன் காரணமாகவே சுமார் 1.5 கோடி பேர் இன்ஸ்டாகிராம் தளத்தில் அவரை பின்தொடர்கின்றனர்.

இந்த நிலையில், துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் இப்போது தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் விடுமுறைக்காக லண்டன் சென்றுள்ளார். லண்டனில் இருந்தபடியே அவர் பல்வேறு படங்களைப் பகிர்ந்து வருகிறார். அப்படி அவர் பதிவிட்டுள்ள ஒரு படம் இணையத்தில் வேகமாகப் வைரலாகி வருகிறது.

ஒட்டுமொத்த நாட்டையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசு குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது யாருமே எதிர்பார்க்காத வகையில் லண்டனில் ஓடும் அன்டர் கிரவுன்ட் ரயிலில் பயணித்துள்ளார். நமது மெட்ரோ ரயில்களைப் போல லண்டன் அன்டர் கிரவுன்ட் ரயில் என்பது லண்டனை அதன் புறநகர்ப் பகுதிகளுடன் இணைக்கும் சுரங்க ரயில் நெட்வொர்க் ஆகும்.

தற்போது இன்ஸ்டாகிராமில் வேகமாகப் பரவும் இந்தப் படத்தில் ஷேக் ஹம்தான் தனது நண்பருடன் நெரிசலான லண்டன் அன்டர் கிரவுன்ட் ரயிலில் நின்றபடி பயணிக்கிறார். அரசு குடும்பத்தைச் சேர்ந்த பட்டத்து இளவரசும் அவரது நண்பர் பத்ர் அதீஜ்ஜும் மக்களுடன் மக்களாக இணைந்து எளிமையா ரயிலில் பயணித்ததைத் துபாய் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

அதேபோல அவர் பதிவிட்டுள்ள மற்றொரு படத்தில் துபாய் அரசர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமும் லண்டனில் விடுமுறைக்கு வந்துள்ள படத்தையும் பட்டத்து இளவரசர் பகிர்ந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துபாய் அரசர் மற்றும் 2 குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பட்டத்து இளவரசர் பகிர்ந்துள்ளார்.

துபாய் இளவரசின் எளிமையான போக்கைப் பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர். முன்னதாக கடந்த மாதம் இதேபோல பட்டத்து இளவரசர் ஹம்தான் பின் முகமது யாருக்கும் தெரியாமல் லண்டனில் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை அடையாளம் கண்டுகொண்ட லண்டனில் வசிக்கும் துபாய் மக்கள் அவருடன் ஆர்வமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.