உட்கட்சி விவகாரத்தில் தலையிடும் அதிகாரம் நீதிமன்றத்திற்குஇல்லை .. சி.வி. சண்முகம் பேட்டி ..!

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று விதி இல்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

சென்னை எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஜெயக்குமார். சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- வைத்தியலிங்கம் தேவையற்ற வார்த்தைகளை ரவுடித்தனமாக பேசியுள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது அதிமுகவின் விதி.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று விதி இல்லை. மொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டால் 30 நாட்களுக்குள் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதிமுக அவைத்தலைவர் தேர்வு செல்லாது என்று வைத்திலிங்கம் கூறியது தவறு. நேற்று நடந்த பொதுக்குழுவுக்கு, ஓ.பி.எஸ் கையெழுத்தோடு அழைப்பு கொடுக்கப்பட்டது. தான் கையெழுத்தே போடவில்லை என்கிறாரா? நேற்று நடந்த பொதுக்குழு கூட்டம் முறையற்றது என வைத்தியலிங்கம் கூறுவது ஏற்புடையதில்லை.

உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு பஞ்சாயத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை. தேர்தல் ஆணையத்திற்கு தான் உண்டு. ஜெயலலிதா இருந்தவரை அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் சட்டம், அதை ஏற்றுக்கொள்வோம். அவர் பொறுப்புகளை அறிவித்தால், அடுத்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெறுவார். தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை வழிமொழிகிறேன் என பன்னீர் செல்வமே மேடையில் சொன்னார்தானே. அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. அவைத்தலைவரை பொதுக்குழு உறுப்பினர்களே தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதான் அதிமுகவின் சட்ட விதி. உரிய அனுமதி பெறாமலேயே ஓபிஎஸ் காரில் வந்து வைத்தியலிங்கம் பொதுக்குழுவில் பங்கேற்றார் என சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.