இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது- கோவையில் அமைச்சர் காந்தி பேட்டி..!

கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு கூட்டரங்கத்தில் 60-வது ஜாயிண்ட் டெக்னாலஜிகல் கான்பரன்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஜவுளி, ஆயத்த உற்பத்தியில் தமிழ்நாடு 2ம் இடத்தில் உள்ளது. ஜவுளித்துறை ஆராய்ச்சியில் தமிழகம் சிறப்பாக செயலாற்றி வருகிறது.
ஜவுளித்துறையில் முதலீடு செய்ய முதலீட்டார்களை அழைத்துள்ளாம்.
வரும் 2030ம் ஆண்டுக்குள் 80 லட்சம் கோடி பொருளாதார இலக்கை எட்ட திட்டமிட்டுள்ளோம். சுற்று சூழல் மாசு பெரும் பிரச்னையாக உள்ளது. முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் என்னை டெக்ஸ்டைல் துறை அமைச்சர் பொறுப்பை கொடுத்தார். பெரிய அளவில் நான் அறிந்திராத துறையை எனக்கு கொடுத்தார். காந்தி என்ற பெயரை கண்டதும் இந்த துறையை கொடுத்து விட்டாரோ என எண்ணினேன். கொடுக்கும் பொறுப்பை செவ்வனே முடிக்க துறை அதிகாரிகளை கலந்து தொடர்ந்து பேசி பிரச்னைகளை கலைந்து வருகிறேன்.
Textile துறைக்கு என சிறப்பு கமிஷனை அமைத்து சிறப்பாக செயலாற்றி வருகிறார் முதல்வர். ஆட்சிக்கு வந்து 1 1/2 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த காலகட்டத்தில் ஜவுளித்துறையில் பல முன்னேற்றம் கொண்டு வந்துள்ளோம்.
ஜவுளித்துறைக்கு தனியாக ஆணையர் போடப்பட்டுள்ளது. ஜவுளித்துறை முன்னேற்றத்திற்கான அறிவுப்புகளை வெறுமனே அறிவிக்க விரும்புவதில்லை. மாவட்ட வாரியாக திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறோம். குஜராத்திற்கு பிறகு நாம் தான் ஜவுளித்துறையில் முன்னோடியாக இருக்கிறோம். சேலத்தில் 119 ஏக்கரில் யூனிட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதிகாரிகளை ஒருங்கிணைத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
பருத்தி சாகுபடி வேளாண்துறை உடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
இது திமுக ஆட்சியில்ல, இது மக்கள் ஆட்சி என முதல்வர் ஆட்சி பொறுப்பு ஏற்கும் போது தெரிவித்தார். அதன் படி தான் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வரின் ஆணைப்படி இந்தியாவிலே அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்மாதிரியாக இருக்க இரவும் பகலுமாக உழைத்து வருகிறோம். பருத்தி சாகுபடியை பொறுத்தவரையில் தனி கவனம் செலுத்தி வருகிறோம். பருத்தி இறக்குமதி வரியை முற்றிலும் பெற்றிட தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினர்.