மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது – அமைச்சர் துரைமுருகன் பேட்டி.!!

மேகதாதுவில் அணைகட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது, சட்டப்படியும் அது முடியாது அணை கட்டி விடுவோம் என்று கூறுவது கர்நாடகாவின் அரசியல் ஸ்டன்ட் என்று நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

சென்னை: மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அரசுமுறைப் பயணமாக டென்மார்க் சென்று திரும்பிய நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், “நீர் வளத்துறையில் எப்படி சிக்கனத்தை கடைபிடிப்பது நீர்வளத்துறையில் நீரை எப்படி பாதுகாப்பது என உலகத்துக்கே முன்னோடி நாடாக இருப்பது, டென்மார்க் நாடு. எனவே, சென்னையில் இருக்கக்கூடிய அது போன்ற ஆறுகளிலும் சீரமைக்க வேண்டிய எண்ணம் அரசுக்கு உள்ளது.

எனவே, இது குறித்து அந்த அரசாங்கத்திடம் பேச வேண்டும் என்று நாங்கள் விருப்பம் தெரிவித்திருந்தோம். அங்கு இருக்கக்கூடிய நீர் வளத்துறை அமைச்சருடன் நீண்டநேரம் நமது மாநிலத்தின் நீர் நிலைமைகளை எடுத்துச்சொன்னோம். அவர்களும் கனிவாக கேட்டனர். அது மட்டும் இல்லாமல் உடனடியாக ஒரு வார காலத்திற்குள் டென்மார்க் அதிகாரிகளை தமிழ்நாட்டிற்கு அனுப்ப உள்ளனர்.

அரசு முறைப் பயணம் சிறப்பாக இருந்தது. ஆறுகளில் எங்கு பார்த்தாலும் தாமரைகள் பரந்து விரிந்து கிடக்கின்றன. அதைக் கூட டென்மார்க்கில் எடுத்து பயன்படுத்தி உள்ளனர். காவிரி நீர் நிர்வாகத்தைத் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் என்ற அமைப்பிடம் உச்ச நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது. வழக்கு முடிந்து இது தான் முடிவு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இருக்கக் கூடிய நீர் நிலைமை குறித்து எனக்குத் தெரியாது. இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க உள்ளேன். மீண்டும் நானே டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளேன்.

எந்த காரணத்தைக் கொண்டும் மேகதாதுவில் அணைகட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. சட்டப்படியும் அது முடியாது. வேண்டுமென்றால் அவர்கள் அணை கட்டி விடுவோம் என்று பேசிக் கொண்டு இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் கர்நாடகாவின் அரசியல் ஸ்டன்ட் அது. அவர்களால் ஒன்றும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது.

கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இரண்டுமே அண்டை மாநிலங்கள். ஏராளமான தமிழர்கள் கர்நாடகாவில் வசிக்கின்றனர். ஏராளமான கர்நாடக மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் நல்ல நிலைமையில் உள்ளனர். ஆகவே, இவை எல்லாம் பாதகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது தான் இரண்டு அரசுகளினுடைய போக்கு. அதை தமிழ்நாடு அரசு உணர்கிறது. உள்ளபடியே அவர்களும் உணர்வார்கள் என்று கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்.