கோவை : விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. . இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தற்போதே விநாயர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. கோவையிலும் விநாயகர் சதுர்த்தியன்று இந்து அமைப்பினர், பொது மக்கள், விநாயகர் சிலையை வைத்து வழிபடுவார்கள். கோவையில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணியினர் மற்றும் இந்து அமைப்பினர் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கான ஏற்பாடுகளை தற்போதே தொடங்கி விட்டனர். விநாயகர் சிலை தயாரிப்பு பணியும் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.கோவை வடவள்ளி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர போலீஸ் உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் இந்து முன்னணியினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்து அமைப்பினருக்கு போலீசார் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் உதவி போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- வடவள்ளி காவல் நிலையம் மாநகர காவல் துறையுடன் இணைக்கப்பட்டு விட்டது. எனவே வடவள்ளி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு எந்தெந்த இடத்தில் சிலை வைக்கப்பட்டதோ, அதே இடத்தில் தான் வைக்க வேண்டும். மற்ற இடங்களில் வைக்ககூடாது.மேலும் தாங்கள் வைக்க கூடிய சிலைகளை மிகவும் பாதுகாப்புடன் பார்த்து கொள்ள வேண்டும். சிலை வைத்திருக்கும் இடத்தை சுற்றிலும் தகரம் வைத்து அடைக்க வேண்டும். அங்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வைக்க கூடாது. அங்கு தீயணைப்பு கருவியையும் வைத்திருக்க வேண்டும். இதுதவிர விநாயகர் சிலை வைத்திருக்கும் இடத்தை சுற்றிலும் கண்காணிப்பு காமிராக்களும் பொருத்த வேண்டும். 3 நாட்களுக்கு மேல் சிலைகளை வைக்க கூடாது. 3 நாட்களுக்குள் எடுத்து சென்று கரைத்து விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கு அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் சம்மதம் தெரிவித்தனர்..
விநாயகர் சிலை வைக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்-இந்து அமைப்பினருக்கு போலீசார் வேண்டுகோள்..!
