10, 20 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்கும் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை- அரசு அதிரடி உத்தரவு.!!

நாடு முழுவதும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது புழக்கத்தில் உள்ளன.

ஆனாலும், 10 ரூபாய் தாள் அளவுக்கு 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டுவதில்லை.

தமிழகத்தை பொருத்தவரை சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்களை பரவலாக யாரும் வாங்குவதில்லை. 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று அவ்வப்போது வதந்திகளும் பரவுகிறது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தும் கூட 10 ரூபாய் நாணயம் செல்லும் என்பதை பலரும் ஏற்க மறுக்கின்றனர். சில்லறையாக பைக் வாங்குவது போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடக்கின்றன.

ஆனாலும், 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதற்கான தயக்கம் மக்களிடையே தொடர்கிறது. இந்நிலையில் போக்குவரத்து கழகம் சார்பில் நடத்துனர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் 10, 20 ரூபாய் நாணயங்களை மறுக்காமல் பெற்று பயணச் சீட்டை நடத்துனர்கள் வழங்க வேண்டும். நாணயங்களை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கும் நடத்துனர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.