கோவை – அயோத்திக்கு சிறப்பு ரயில் சேவை – கொடியசைத்து துவக்கி வைத்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.!!

கோவையில் இருந்து அயோத்திக்கு முதல் சிறப்பு ரயில் தனது சேவையை தொடங்கியது.

அயோத்தி ராமர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சென்று வருகின்றனர்.

அவர்களுக்கான ரயில் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோயம்புத்தூரில் இருந்து அயோத்திக்கு, 745 பயணிகளோடு, முதல் சிறப்பு ரயில் சேவை வியாழக்கிழமை (பிப்.8) தொடங்கியது.

இதனை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் சின்ஹா, துணை மேலாளர், ரயில்வே அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் மலர் தூவி பக்தர்களை வழி அனுப்பி வைத்தனர்.

இந்த ரயில் வரும் ஞாயிற்றுக்கிழமை அயோத்தியை சென்றடைகிறது. இதற்காக ரயில்வே துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

சிறப்பு ரயில் தொடங்கியதையடுத்து 100க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மோப்ப நாய்களை கொண்டு வெடிகுண்டு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

வரும் 13ஆம் தேதி அடுத்த ரயில் கோவையில் இருந்து அயோத்திக்கு செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.