சிவகுமாருடன் தம்பியும் மனு தாக்கல் – கனகபுரா தொகுதியில் பரபரக்கும் அரசியல் களம்..!

ராம்நகர்-கனகபுரா தொகுதியில், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது தம்பி சுரேஷும் நேற்று மனு தாக்கல் செய்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.ராம்நகர் மாவட்டம் கனகபுரா சட்டசபை தொகுதியில், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக தரப்பில் வருவாய் துறை அமைச்சர் அசோக் களம் இறக்கப்பட்டுள்ளார். இருவரும் பிரமாண்டமான பேரணி நடத்தினர். இதற்கிடையில், சிவகுமாரின் மனு தள்ளுபடி செய்யப்படலாம் என்று அவருக்கு நேற்று மதியம் ரகசிய தகவல் வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது தம்பியும், பெங்களூரு ரூரல் எம்.பி.,யுமான சுரேஷ் நேற்று திடீரென கனகபுரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார். பின், அவர் கூறுகையில், ”என் அண்ணன் சிவகுமாருக்கு நான்கு நாட்களுக்கு முன், சென்னை சி.பி.ஐ.அலுவலகத்தில் இருந்து நேரில் ஆஜராகும்படி ‘நோட்டீஸ்’ வந்தது. தேர்தலுக்கு பின் வருவதாக தெரிவித்தார். பா.ஜ.,வினர் ஏதோ சதி செய்வதாக தகவல் வந்ததால், நான் மனு தாக்கல் செய்துள்ளேன்,” என்றார்.