தமிழகத்தில் இன்று கடைகள் அடைப்பு- பரபரப்பு தகவல்..!

தமிழகத்தில் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது.

அதோடு மட்டுமில்லாமல் விசைத்தறிகள் இந்த மாவட்டங்களில் அதிகமாக செயல்படுகிறது. இந்த மாவட்டங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு தொழில் நகரமாக உள்ளன. இந்த மாவட்டங்களில் இருந்து துணிகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் அதிக விலைக்கு இந்த துணிகள் விற்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சரியான கூலி வந்து சேருவதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து தொழிலாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டும் இதுவரை எந்த பலனும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தினர். அதன்பிறகு தமிழக அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் பல்லடம் உள்ளிட்ட 4 சங்கங்கள் மட்டும் தங்களுடைய போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இருப்பினும் ஒப்பந்த வடிவில் கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும் என்று சோமனூர் உள்ளிட்ட 5 சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அந்த சங்கங்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் (பிப்.22) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு பிறகு போராட்டத்தை ஒத்திவைத்தனர். இருப்பினும் பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் எங்களுடைய போராட்டம் தமிழக அரசை ஈர்க்க வேண்டும் என்று கூறி சோமனூர் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி, “கருமத்தம்பட்டி, பதுவம்பள்ளி, அவிநாசி, பருவாய், காரணம்பேட்டை, தெக்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (பிப்.25) கடையடைப்பு நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு வேன் ஓட்டுனர்கள், வணிகர்கள், உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் ஆதரவு தரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.