பிரதமர் மோடி தலைமையில் ஜூலை 4 ஆம் தேதி எஸ்சிஓ உச்சி மாநாடு..!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 22வது உச்சிமாநாடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், காணொலி முறையில் நடைபெற இருக்கிறது.

இந்த உச்சி மாநாட்டை ஜூலை 4ம் தேதி இந்தியா நடத்துகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 16 அன்று நடந்த சமர்கண்ட் உச்சிமாநாட்டில் எஸ்சிஓ-ன் சுழற்சித் தலைவர் பதவியை இந்தியா ஏற்றுக்கொண்டது.

அதன்படி, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய அனைத்து எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரான், பெலாரஸ் மற்றும் மங்கோலியா ஆகியவை பார்வையாளர் நாடுகளாக அழைக்கப்பட்டுள்ளன. எஸ்சிஓ பாரம்பரியத்தின்படி, துர்க்மெனிஸ்தானும் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது. 14 அமைச்சர்கள் அளவிலான கூட்டங்கள் உட்பட மொத்தம் 134 கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை இந்தியா நடத்தியிருக்கிறது.