செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு ஜாமீன் மனு – நவ.6ம் தேதிக்கு ஒத்தி வைப்பு..!

மைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு நவம்பர் 6ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் செந்தில் பாலாஜி, ஆரோக்கியமாக இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியாது என ஏற்கனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் என குறிப்பிடவில்லை எனவும் அமலாக்கத்துறை வாதிடப்பட்டது.

இதனையடுத்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதற்கு எதிராக செந்தில் பாலாஜி சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை வரும் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அனிருதா போஸ் மற்றும் பீலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். இருதரப்பு வழக்கறிஞர்களும் விசாரணையை மதியம் வைத்துக் கொள்ளலாம் என கேட்டதற்கு அடுத்த திங்கள்கிழமைக்கு ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.